Sunday, 29 January 2017

நிறைய படிச்சவங்களும், குறைவா படிச்சவணும்!


காலை, 10:00 மணிக்கு, அந்த, 'டிவி' ஸ்டேஷனுக்கு, காரில் வந்து இறங்கினான். பிரபல, 'ரகு டிராவல்'சின் சொந்தக்காரன் ரகு.
ரோஜா கொடுத்து வரவேற்றனர்; வரவேற்பறை சோபாவில் அமர்ந்து சிறு இளைப்பாறலுக்கு பின், ஸ்டுடியோவிற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தார், ஒருவர். எதிரில், சிறிய டீப்பாய்; அதன் மீது, பூ ஜாடி. ரகுவுக்கு, சட்டையின் உள்பக்கமாக நுழைத்து, மேல் பொத்தானுக்கு கீழ், 'காலர் மைக்' வைத்தனர். லைட்டிங், கேமரா கோணம் எல்லாம் சரி பார்த்து, ''சார்... 'டேக்' போலாமா...'' என்று, எதிர் இருக்கையில் அமர்ந்தார் நிருபர்.
''இது, 'ரிக்கார்டட் புரோக்ராம்' தான்; ஈசியா இருங்க,'' என்று சொல்லி, கேமரா பக்கம் திரும்பி, ''நேயர்களுக்கு வணக்கம்; எழுவோம் உயர்வோம்' நிகழ்ச்சி மூலம், வாரம்தோறும், வெற்றிகரமான தொழில் முனைவோர்களை, நாம் சந்தித்து வருகிறோம். அவ்வகையில், இன்று, நம்மிடையே உரையாட வந்திருப்பவர், இளம் தொழிலதிபர் ரகு. எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து, சென்னையில், பல இன்னல்களை எதிர்கொண்டு, படிப்படியாக உயர்ந்து, இன்று, 'டாப் டென்' டிராவல்ஸ்களில் ஒன்றாக உயர்ந்துள்ள, 'ரகு டிராவல்'சின் அதிபர் ரகு அவர்களை, இப்போது சந்திப்போம்...''
''வணக்கம் சார்... இன்றைக்கு, உங்கள் டிராவல்ஸ், மக்கள் மத்தியில், பிரபலமாக இருக்கிறது. பயணம் மேற்கொள்ளும் மக்களின், முதல் சாய்ஸ் உங்கள் நிறுவன வாகனமாகத் தான் இருக்கிறது. வர்த்தக ரீதியாகவும், பெரிய வெற்றியை அடைந்திருக்கிறீர்கள்; பாராட்டுகள். உங்களை பற்றிச் சொல்லுங்கள்.''
''நான், திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவன். ஆரம்ப பள்ளியில் படித்ததோடு சரி... பெற்றோருக்கு உதவியாய், 20 வயது வரை கூலி வேலை தான் செய்தேன். வயல் வேலைகளை தவிர, வேறு எதுவும் தெரியாது.''
''சென்னைக்கு வரணும்ன்னு ஏன் தோணிச்சு?''
''ஒரு கட்டத்துல, விவசாயம் குறைஞ்சு போச்சு. தண்ணீர் தட்டுப்பாடு ஒரு பக்கம்; நிலம் வச்சிருந்தவங்க, விவசாயத்தை விட, லாபகரமா ஏதாவது செய்யணும்ன்னு விரும்பி, மாந்தோட்டம், செங்கல் சூளைன்னு மாறினாங்க... இன்னும் சிலர், வயல்களை துண்டு போட்டு, மனைகளாக்கினாங்க. இதனால், என்னை மாதிரியான உழைப்பாளிகள், கிராமத்துக்கு அப்பால், பிழைப்பை தேட வேண்டிய சூழ்நிலை. 'சென்னையில் குப்பை அள்ளினாலும் காசு; குப்பையை கிளறினாலும் காசு'ன்னு சொன்னாங்க. அதனால தான், சென்னைக்கு புறப்பட்டு வந்துட்டேன்.''
''நீங்க, சென்னைக்கு புறப்பட்டப்ப, அப்பா - அம்மா என்ன சொன்னாங்க; மத்தவங்க, 'ரியாக் ஷன்' என்ன?''
''பெத்தவங்க, ரொம்ப தொலைவுக்கு போறியேன்னு கவலைப்பட்டாங்க. ஆனால், சில பேர், 'மெட்ராசுக்கு பொண்ணு பாக்க போறயா'ன்னு கிண்டல் செய்தாங்க. 'வேலை தேடி போறேன்'னு சொன்னப்ப, ஒருத்தன் 'தலைமை செயலகத்துல, 'சீப் செகரட்டரி' வேலைக்கு போறான்டா'ன்னும், இன்னொருத்தன். 'இல்லடா... சினிமாவுல, அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு, ஆள் தேடுறாங்களாம்; அதுக்குத் தான் மெட்ராசுக்கு போறான்...' என்று, ஆளாளுக்கு கேலி செய்தாங்க.
''இத்தனைக்கும், அவங்க எல்லாம், என் நண்பர்கள் தான். ஆரம்பத்துல, எல்லாரும் ஒண்ணா படிச்சோம்; அப்புறம், அவங்க, மேல் படிப்பு படிச்சு, டிகிரியெல்லாம் முடிச்சு, வேலைக்கு, 'அப்ளை' பண்ணிட்டு, கோவில் மண்டபத்துல, ஜமா போட்டு, பேச்சு கச்சேரி நடத்திக்கிட்டிருப்பாங்க. நான் போனால் டீ, சிகரெட்டுன்னு வாங்கி வரச் சொல்வாங்க. அவங்க அளவுக்கு படிக்காததால, என்னை தாழ்வாத் தான் நடத்துவாங்க.''
''சென்னைக்கு வரும் போது, நீங்க இப்படி வெற்றிகரமான தொழில் அதிபரா வருவீங்கன்னு நினைச்சீங்களா?''
''நிச்சயமா இல்ல. ஏதோ ஒரு வேலை; அதை, நல்ல விதமா செய்து, நாலு காசு சம்பாதிக்கணும்; நாமும் சாப்பிட்டு, ஊருக்கும் அனுப்பணும்ன்னு தான், நினைச்சேன். சென்னையில் வந்து இறங்கியதும் எனக்கு கிடைச்ச முதல் வேலையே, டிராவல் ஏஜன்சி ஆபீசில், கூட்டிப் பெருக்குற வேலை தான்,'' என்றதும், ''நீங்க எந்த தொழில்ல முன்னேறப் போறீங்க என்கிறத ஆரம்பத்திலேயே, இயற்கை, அடையாளம் காட்டிருச்சு...'' என்றார் நிருபர்.
''ஆமாம்; தினமும், ஆபீசை சுத்தம் செய்து, வாசல் தெளிப்பேன்; பூ வாங்கி, சாமி படத்துக்கு போட்டு, பத்தி ஏத்தி வைப்பேன்; ரெகார்டுங்க, பில் புக், போன்னு எல்லாம் துடைச்சு, 'நீட்டா' வைப்பேன்; வர்றவங்களை கவனிப்பேன்; அப்படியே, அங்கு வந்து போற வாகனங்களை, கழுவுற வேலையும் சேர்த்து பார்த்தேன்; 'டிரிப்' போற வாகனங்கள்ள, கிளீனரா போயிருக்கேன்; இப்படியே ஒரு ஆறேழு வருஷத்துல, தொழில் எனக்கு பிடிபட்டுடுச்சு.''
''தனியா, 'டிராவல்ஸ்' ஆரம்பிக்கணும்ன்னு, எப்ப தோணிச்சு; எப்படி ஆரம்பிச்சீங்க?''
''எங்க ஓனர்கிட்ட இருந்த பழைய, 'மெட்டோடர்' வேன் ஒண்ண, விக்க இருந்தார். 'அதை, எனக்கு கொடுங்களேன் முதலாளி; பணத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கிறேன். அதை வச்சு பிழைச்சுக்க முடியுமான்னு பார்க்கறேன்'னு கேட்டேன்; என்ன நினைச்சாரோ... 'சரி எடுத்துக்க'ன்னார். அவர் ஆபீஸ்ல வச்சே, ஆட்களை சேர்த்து, நவக்கிரக கோவிலுக்கு, முதல், 'டிரிப்' போய் வந்தேன்; மக்களுக்கு சந்தோஷம்; எனக்கும், நல்ல ஆரம்பமா இருந்துச்சு.''
''அடுத்தடுத்த வளர்ச்சி, எப்படி ஏற்பட்டது?''
''சேவைக்கு முன்னுரிமை கொடுத்து, லாபத்தை ரெண்டாம் பட்சமா நினைத்து செயல்பட்டாலே வளர்ச்சி தானா வந்துரும். 10 வருஷ அனுபவம்; ரூட்டு தெரிஞ்சுருச்சு. பழைய வண்டி ஓட்டி சம்பாதிச்சதை, முதலா போட்டு, புது வண்டி எடுத்தேன். அடுத்தடுத்து நாலு கார்கள், நாலு வேன்கள் சேர்ந்துச்சு... அப்புறம், பஸ் பக்கம் கவனம் திரும்ப, அப்படியே, டிரெய்ன் டிக்கெட் புக்கிங், பிளைட் டிக்கெட் அரேஞ்ச் செய்றது, 'பேக்கேஜ் டூர்' அரேஞ் செய்றதுன்னு பலதும், ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்தேன். இப்ப, வெளிநாட்டிலிருந்து, சிகிச்சைக்காக, நம் நாட்டுக்கு வருவோருக்கு, 'மெடிக்கல் டூர்' அரேஞ்ச் செய்றோம்; இது, 'ஆன்லைன்' வர்த்தகம்... நிலைமைக்கு ஏற்ப, நாமும், 'அப்-டேட்' ஆகிக்கணும். அந்த அடிப்படையில், 'ரகு டிராவல்ஸ் டாட் காம்' ஆரம்பிச்சேன். இதே லைன்ல இருக்கிற மத்த, 'ஆன்லைன்' நிறுவனங்களோடு, 'டை - அப்' வச்சுக்கிட்டு, தொழிலை முன்னெடுத்து போய்கிட்டிருக்கோம். முதலில், தனி மனிதனாக துவங்கியிருந்தாலும், பல பேருடைய ஒத்துழைப்பால், இது ஒரு கூட்டு முயற்சியால் ஏற்பட்ட வளர்ச்சியா தான் பாக்கறேன்.''
''பள்ளிப்படிப்பை முடிக்காத உங்களால், எப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கி, நிர்வகிக்க முடியுது... இதுக்கு, நிறைய கல்வியறிவு தேவைப்படுமே... அதை எங்க, எப்படி படிச்சீங்க?''
''படிச்சவங்களை வேலைக்கு வச்சுக்கிட்டேன்... திருப்தியான சம்பளம் கொடுக்கறேன். வேலையை அவங்க பார்த்துக்கறாங்க; நான் மேற்பார்வை தான்,'' என்றான்.
மேலும், தொழில் மற்றும் குடும்பம் சம்பந்தமாக, எதிர்கால திட்டங்கள் குறித்த கேள்விகள், அதற்கான பதில்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட பின், பேட்டி முடிந்து, புறப்படும் போது, ''கடைசியா ஒரு கேள்வி... நீங்க, கிராமத்திலிருந்து புறப்பட்ட நாளில், நண்பர்களே பரிகாசம் செய்தாங்கன்னு சொல்லியிருந்தீங்க... அவங்களை, திரும்ப பாத்தீங்களா; அவங்க, இப்ப, எங்க, என்ன நிலையில் இருக்காங்க?'' என்று கேட்டார் அந்த நிருபர்.
புன்னகைத்த ரகு, ''அவங்கெல்லாம், இப்ப எங்கிட்ட தான் வேலை பார்க்கறாங்க,'' என்றவன், ''ஒரு விஷயம்... ஆரம்பத்துல அவங்க எப்படியெல்லாம் பரிகாசம் செய்தாங்கன்னு சொன்னேன் இல்லையா... அதை, ஒளிபரப்ப வேணாம்; 'கட்' செய்துடுங்க. ஏன்னா, பேட்டி ஒளிபரப்பாகும் போது, அதை பார்த்தால், அவங்களுக்கு சங்கடம் ஏற்படலாம்.
''ஏற்கனவே, என்கிட்ட வேலைக்கு சேர்றதில், அவங்களுக்கு சங்கோஜம் இருந்தது. 'வேலைக்கு வந்ததா நினைக்காதீங்க; எனக்கு, உதவி செய்ய வந்ததா நினைச்சுக்குங்க. ஒரு நண்பனுக்காக, இதை செய்யக் கூடாதா'ன்னு கேட்டு, சகஜ நிலையில் வச்சிருக்கிறேன்; அந்த சுமூகமான நிலை கெட்டுடக் கூடாது... சரியா,'' என்று கேட்டுக் கொண்டான்.
''சரி சார்... அந்தப் பகுதியை நீக்கிடறோம். உங்க முன்னேற்றத்துக்கு, உழைப்பு, சேவை மனப்பான்மையை எல்லாம் காரணம்ன்னு சொன்னிங்க... ஆனால், உங்களை பழிச்சவங்களை கூட, அரவணைச்சதும் இல்லாமல், அவங்களுக்கு, எந்த வகையிலும், சங்கடம் உண்டாகிடக் கூடாதுன்னு நினைக்குறீங்க பாருங்க... அந்த குணம் தான், உங்களின் இந்த உயர்வுக்கும், இனிமேல் வரப்போகும் வெற்றிகளுக்கும், முக்கியக் காரணம்ன்னு நினைக்கிறேன். ஆல் த பெஸ்ட்!''

No comments:

Post a Comment